நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்
ஆரியகுலத்தின் மேவிய செல்வன் நேரிய வழியினன் நேர்மைக் குசேலன் காரியவண்ணன் கருணை வள்ளல் பாரின் வேந்தன் கண்ணனின் நண்பன் சீரிய நட்பின் ஓவிய இலக்கணம் பாரினில் வாழ்ந்திட இருவரும் வாழ்ந்தனர் பாரினை விளக்கும் பகலவன் குலத்தின் பண்பிற் சிறந்த பெரியோர் வாழிடம் தோழர் இருவரும் தொழுதே கற்று நேசக் கரங்களை நெருக்கிப் பிடித்தனர் காலக் குதிரையோ கடிதாய் விரைந்தது கல்விக் கடலின் கரைதனைக் கண்டனர். கருவிழியழவும் கைகள் நெகிழவும் இருவர் மனத்திலும் ஏக்கப் பிரிவுகள் ஆண்டுகள் கடந்ததும் மாண்டன நினைவுகள் அருமைக் கண்ணனோ ஆயர் தம் வேந்தன்! அந்தணன் குசேலனோ நொந்தனன் வாழ்வை ஓட்டைக் குடிசையும் மனைவியும் மக்களும் ஏக்க மனத்தினன் போக்கிடம் அறிந்திலன் கண்ணனைக் கண்டு கனிந்திட எண்ணினான் பொன்னொளி நிகர்த்த புவியின் வேந்தன் வெள்ளைச் சிரிப்பில் முல்லையை வென்றவன் வானவர் வாழ்த்திட வாழும் கண்ணனின் துவாரகா புரிக்கு வந்தான் குசேலன் நோக்கும் இடமெலாம் தேக்கும் வாழையும் வானையும் எட்டும் வைக்கோற் குவியல்கள் அன்புக் கண்ணனின் அரண்மனை தொட்டிட எண்ணி எண்ணி நகர்த்தினான் கால்களை வாயிற் கா...