ஜல்லிக்கட்டு மெரினா புரட்சி
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைத்தெறிந்த மாபெரும் இளைஞர்புரட்சி சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 2017ல் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வு... தமிழ் இளைஞர்கள் மிகவும் கண்ணியமாக ஜனநாயக நெறிகளோடு போராடி உலக மக்களின் கவனத்தையும் ஆட்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி கண்டார்கள். அந்த அகிம்சை வழி புரட்சியால் ஈர்க்கப்பட்டு .. அப்போது என்னால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை இது ! அரசியல் புழுதியின் அவலங்கள் போக்கி நீடு துயில் நீக்கப்பாடி வந்த நிலாக்கள்! ஆர்ப்பரிக்கும் அலைக்கடல்கள் அடங்கிப்போக சீறிப் பறக்கும் தலைக்கடல்கள் எம் சிங்கங்கள்! தறிகெட்டுப் போன அரசியல் நாடகங்களுக்கு முடிவுகட்டப் பிறந்த எம் புரட்சிதீபங்கள் ! தன்னெழுந்து போராடும் காளையரும் தங்கையரும் விண்ணுயர்ந்த தமிழ்மரபின் கண்ணியத்தின் வடிவங்கள் ! பொன்னெழுத்தில் வரலாறு போற்றும் - நம் புரட்சிப்போர் எண்ணத்திலும் உதிக்காது துரோகம் - அது வீழ்ந்தது பார் ! தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே நமக்கோர் குணமுண்டு தயந்து பணியும் நம்முள்ளே- தகிக்கும் எரிமலைக் குழம்புண்டு !