Posts

Showing posts from July, 2019

விண்ணைத் தாண்டிய காதல்- சந்திரயான் -2

Image
இன்று 22 July 2019 நம் நாடு நாம் அனைவரும் பெருமை கொள்ளும் சரித்திர சாதனையாக நிலவுக்கு சந்திரயான் - 2 என்னும் விண்வெளி ஓடத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. மேலும் அதை நிலவின் பரப்பில் இறக்கி சாதனை படைக்க காத்திருக்கிறது... அதன் பொருட்டு என் வாழ்த்து மடல் இது... இளமதிமேல் மையல் கொண்ட இந்தியரின் தூதுவனாய்- நம் இளவயது கனவுகளை ஏந்தி வரும் மலர்க்கணையாய் ! சோறூட்டும் அன்னை நிலா மடி சேரும் மழலைகளாய் ! விண்ணைத் தாண்டி நம்காதல் வெண்ணிலவைத் தொட்டது இன்று ! அன்னை மடிபோய் விழுந்தாய் விக்ரம்! அந்த நொடி நின்று போனதே இதயம்! சென்று சேர்ந்த உன் தகவல் வருமா? கன்றுகள் கேள்விக்கு என்ன நாங்கள் சொல்ல? ஒன்று மட்டும் உறுதி செய்தாய் நன்று! என்றுமிலா வேட்கையுடன் எமதுமனம் இன்று! அறிவியல் சிறகை விரித்தது நாடு அடிமை மாயைகள் அகன்றதே இன்று! இந்தியச்சாதனைக்கு ஏது எல்லை  ? சந்திரயானுக்கு ஈடு இணை யில்லை! கவிஞர்: கோ.பார்த்தசாரதி

தாமரையின் காதல்

Image
கதிரவனைக் கண்டு தாமரை காதல்கொள்ள, அதைக் கேள்விப்பட்டு தென்றல் ஊரெல்லாம் புரளி பேச, தேனீக்களோ மலர்தோறும் சென்று இந்த கிசுகிசுவைப் பரப்பிவிட ... அதன் பின்னர் இயற்கையில் நடக்கும் பலவற்றை கற்பனையில் வடித்து புனைந்துள்ளேன்.. இக்கவிதை தங்கள் பார்வைக்கு... காலை இளம்பரிதி கண்டு காதலில் மலர்ந்த குமுதம் ஊரார் அறிய அலர்தூற்றி உள்ளம் மகிழும் தென்றல் சோலை நிறைந்த மலர்கள் காதில் கதைசொல்லும் தேனீ பாடி வரவேற்கும் குயில்கள் ஆடல் அரங்கேற்றும் மயில்கள் தாளம் இசைகூட்டும் மந்தி தாவிக் குதித்தோடும் மான்கள் வண்ணம் தீட்டிய வானம் பொன்மஞ்சம் அமைத்த மேகம்! கவிதை பாடிவரும் கரிவண்டு கரம்கோர்த்து ஆடும் மலர்ச்செண்டு மடியில் விழுந்த பனித்துளிகள் மாலையாய் கோர்க்கும் புற்கொடிகள் வளையல் பூட்டிய வானவில் வளைத் தோரணம் அமைத்த கொன்றை வெட்கித் தலைகுனியும் வாழை வெண் நிலவைத் தேடிடுமே அல்லி! மதிமறந்து உறங்கும் மாந்தர் செவி புகுத்து தென்றல் சொல்லும், கழனி பூத்த தாமரைக்கும் காலை எழும் கதிரொளிக்கும் மாலை சூட்டி மகிழ்வதற்கு - நல்ல வேளை ஒன்று வந்தது என்று!  கவிஞர் : கோ.பார்த்தசாரதி ...

மனம் குளிரும் மழை அழகு

Image
அது என் கல்லூரி வாழ்க்கையின் முதலாம் ஆண்டு . 1994 மேல்மருவத்தூர் சூழல் எனக்கு புதுமையானது. வெளியெங்கும் ஆளரவமற்ற தனிமை குடிகொண்டிருக்கும். நண்பர்களை விட்டால் வேறு உலகத் தொடர்பே இருக்காது. நல்ல வேளை அப்போது ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தான் எனது கல்லூரி வாழ்க்கை எனக்கு ஏராளமான அன்பு நண்பர்களைப் பெற்றுத் தந்தது... ஒரு முறை ஒரு அழகிய மழைக்காலத்தில் என் கவிஆர்வம் துளிர் விட இந்த கவிதையை எழுதினேன்.. என் நண்பர்கள் வெகுவாக பாராட்டி... மறுநாள் கல்லூரி வகுப்பு நேரத்தில் ஆசிரியரிடம் கூறிவிட்டார்கள். அவரும் ஆர்வமிகுதியில் நண்பனை அனுப்பி விடுதியிலிருந்து எனது கவிதைப் புத்தகத்தை எடுத்துவரச் செய்து வகுப்பறையில் அனைவர் மத்தியில் உரக்கப் படிக்கச் சொன்னார். அப்போது அனைவரது பாராட்டுக்கும் உள்ளானேன். அன்று முதல் நான் நான்கு சுவர்களுக்குள் எழுதிய கவிதைகளை பொதுவெளியில் வெளியிடும் துணிவு கொண்டேன். பிறகு நான் கல்லூரியில் ஒரு கவிஞனாக அறியப்பட்டேன். இக்கவிதை என்னை முழு கவிஞனாக நண்பர்களுக்கு அடையாளப்படுத்திய மறக்க முடியாத கவிதை ... தமிழின் சிறப்புகளில் ஒன்று... ஒரு எழுத்து வார்த்தைக...

உயிரே காதலில் உருகுதடி

Image
என் இளம் பருவத்தில் காதல் கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறேன்.. அனைத்தும் கற்பனையாய் எழுதப்பட்டவையே என எடுத்துச் சொன்னாலும் நம்பக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை. எவர் என்ன சொன்னால் என்ன ... எனது படைப்புகள் ஏட்டுச் சுரைக்காய்களாய் இருந்து செல்லரித்து போய் விட விரும்பவில்லை... இது ஒரு தலைவன் தலைவியிடம் கொண்ட காதலால் பிதற்றும் கவிதை... முத்துக்கள் கோர்த்தது உன் சிரிப்பு முத்தங்கள் கோர்த்திட எனக்குள் தவிப்பு  சித்திரம் பேசும் உன் கண்கள் நித்திரை மறந்தன என் விழிகள் வருடாமல் வருடவந்த வாச மலரே - உனக்கு வரவேற்புக் கோலமிட வானவில்லை அழைக்கின்றேன். மறுக்காமல் ஏற்றுக் கொள் என்  மனமெனும் மலர்ச்செண்டை நெருக்கமாய் கேட்டுப் பார்  என் இதயத் துடிப்பில் உன் பெயர் கேட்பதை வஞ்சித்து சென்று விட நான்  உன் போல் வஞ்சியல்ல நெஞ்சைத் திறந்து சொல்வேன்  நினைவெல்லாம் நீதானென்று வர்ணணை செய்ய வார்த்தைகளைத் தேடவில்லை வரிகளை எழுத வைரங்களைத் தேடுகிறேன் சங்கீதம் கற்றுக்கொள்கிறேன் நான் - ஆம் கலகலக்கும் உன் காற்கொலுசைக் கேட்டுப்பார்! படபடக்கும் உன் இமைகளைக் கேட்டுப் பார் !...

இந்திய சுதந்திரப் பொன்விழா 1997

Image
நம் இந்திய தேசம் அடிமைத்தளையிலிருந்து 1947 ல் விடுபட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து வீறுநடை போட்ட தருணம்...1997ல் நம் நாடே மகிழ்ச்சியாக கொண்டாடியது. அந்த "சுதந்திரப் பொன் நாள்" நாம் அடிமைத்தனத்திலிருந்து வெகு தொலைவு வெற்றிகரமாக கடந்து வந்து விட்டோம் என நமக்கு நினைவூட்டி பெரு மகிழ்ச்சியளித்த தருணம் அது. இப்போது நாம் நூற்றாண்டு கொண்டாட்டத்தை நோக்கி விரைவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.. இந்த நேரத்தில் எனது பழைய சுதந்திரப்பொன்விழா கவிதை எக்காலத்திற்கும் பொருந்துவதை எண்ணி அசை போட்டுப் பார்க்கிறேன். அக்கவிதை இதோ! பொழுதெல்லாம் புல்மடியில்        புரண்டு போகப் புலர் காலைப் பனித்துளிகள்         புகையாய்ச் சூழ விரிகதிரோன் வருகை தர          விடிவெள்ளி பிரிவு பெற மலரேந்தும் சோலையெல்லாம்         மதுவேந்தி மயங்கி வீழ மதுவெறியில் மதிகெட்டு - கரிவண்டு         ரீங்கார முழக்கமிட மஞ்சள் கீழ் வானம்         மணப் பெண்போல் கோலமிட விரிகதிரோன் கண்ணசைவில் ...

புத்தாயிரம் ஆண்டு 2000 உறுதிமொழி

Image
புதிய புத்தாயிரம் ஆண்டு 2000 பிறந்தபோது மக்களிடத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அது 21ம் நூற்றாண்டின் பிறப்பு என்பதுதான் சிறப்பு. மில்லென்னியம் ஆண்டு பிறப்பை மிக மிக உற்சாகமாக உலகமே கொண்டாடியது... அந்த குதூகல நினைவு இந்த தலைமுறை இளைஞர் நினைவில் ஒரு பசுமரத்தாணி எனலாம்...அந்த அனுபவம் அடுத்த நூற்றாண்டவருக்கு கிடைக்க போவதில்லை... அந்த 2000 அண்டு பிறப்பன்று நம் இளையதலைமுறை ஏற்க வேண்டிய உறுதிமொழிகளை பட்டியலிடும் நோக்கிலும்...எனது இளநெஞ்சில் உதித்த கனவை நனவாக்கும் நோக்கிலும் அன்று இக்கவிதையை இயற்றினேன். விடிகாலை சூரியனை மடியிலேந்தி விரிகடலின் அலைக்கரங்கள் ஆர்ப்பரிக்க; வெள்ளிப்பனி இமயச் சிகரக் கூட்டம்  வெண்மேக மென் தாடி தடவிப்பார்க்க; குயிலோசை கேட்டு குமுதமலர் கண்திறக்க; குளக்கரையில் தவளையெல்லாம் கும்மாளக் குதியலிட; ஆயிரத்தில் ஒருமுறை அவனியில் பூக்கும் 'புத்தாயிரம் ஆண்டு' பூக்கிறது இன்று!  பூவுலக நாடகத்தில் புதியதோர் அத்தியாயம்! புறப்படுங்கள் இளைஞர்களே! போதும்  இங்கு அநியாயம்! வறட்சி இதயத்து உலகோர்முன்னெ  புரட்சியில் காண்போம் புதிய பா...

கார்கில் போர் 1999

Image
தேசப்பற்று உணர்ச்சிப் பெருக்காய் ஊற்றெடுத்த தருணம் ஒன்று எனது இளம் வயதில் சந்திக்க நேர்ந்ததென்றால் அது 1999ம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த கார்கில் யுத்தம் தான். யாரும் எதிர்பாராத ஒரு கடுங்குளிர் காலத்தில் பாக்கிஸ்தான் படைகள் நமது கார்கில் குன்றுகளை ஆக்ரமித்து தாக்குதல் நடத்த துவங்கின.. அந்த சவாலை முறியடித்து மூன்று மாதப் போருக்குப் பிறகு நமது இந்தியப் படைகள் நமது கார்கில் எல்லையை மீட்டெடுத்தனர்.. அந்த வரலாற்று நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. பள்ளிகள் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தி பாக்கிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டதை பல இடங்களில் கண்டேன் ... எனது இளரத்தம் கொதித்து .. அப்போது நான் எழுதிய கவிதை இதோ கார்கில் போர் சகோதர பாசத்தில் சமாதானம் பேசினோம்? மதம் கொண்டு போனதால் மதிகெட்டு போனதோ? பஞ்சத்தில் செத்தும் பசியால் உழன்றும் வஞ்சிக்கும் எண்ணம் நெஞ்சில் பிறந்ததோ? பஞ்சென நினைத்துப் பனிமலை ஏறிவிட்டாய் ! துஞ்சும் புலியை தூசென நினைத்து விட்டாய் வெஞ்சினம் கொண்ட எம் வீரர்கள் உன்னை சுட்டுச் சாய்க்குமுன் விழுந்திடு கால்களில் எல்லை தாண்டி முள்ளை மிதித்து விட்டாய் எலிவளை விடுத்து புலிக்குகை ...

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

Image
சிறு வயதில் எனக்கு கவிதை எழுதிப் பழக ஆர்வம் மிகுந்த தருணம் நான் சில வரிகளை கிறுக்க முற்பட்டேன்.. தமிழாசிரியரான எனது அன்னையார் கவிதை எழுத சில அடிப்படையான விஷயங்களை எனக்கு எடுத்துக் கூறி எனக்கு வழி காட்டினார் .... எதுகை, மோனை , இயைபு மற்றும் சீர் போன்ற அடிப்படையோடு எழுதப்படும் மரபுக்கவிதைக்கு தனி மதிப்பு உண்டு என புரிய வைத்தார்... எனது ஆரம்ப கால கவிதைப் பயிற்சிக்கு கிடைத்த தலைப்பு தான் "நட்சத்திரங்கள்" இந்த என் சிறுவயது கவிதை சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் எனக்குள் இருக்கும் தமிழ் அறிவு வெளிப்பட ஒரு கருவியாக அமைந்தது ... அக் கவிதை இதோ ! முத்துப் பல் காட்டி நித்தம் அமுதூட்டி சித்தம் மெருகேற்றி சிந்தை ஒளி கூட்டி கத்தும் கடல் பார்த்து கண் சிமிட்டும் காரிகையே முத்துத் தாரகையே முழுமதியின் தோள்வரையே! வானதேவன் வாரியிறைத்த வைரச் சிதறல்கள் பட்டத்து ராணியின் தோட்டத்தில் உலவிடும் மின்மினிப் பூச்சிகள் உலா வரும் நிலாப் பெண்ணின் உதிர்ந்துவிட்ட கூந்தல் மலர்கள் அண்ணாந்து பார்த்தவர் -இது போல் ஆயிரம் கதை சொல்வார் உனைவைத்து.. நித்திலமாய் ஒளி வீசும் தாரகையே- இனி நீயும் ஒர் ப...

ஜல்லிக்கட்டு மெரினா புரட்சி

Image
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைத்தெறிந்த மாபெரும் இளைஞர்புரட்சி சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 2017ல் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வு... தமிழ் இளைஞர்கள் மிகவும் கண்ணியமாக ஜனநாயக நெறிகளோடு போராடி உலக மக்களின் கவனத்தையும் ஆட்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி கண்டார்கள். அந்த அகிம்சை வழி புரட்சியால் ஈர்க்கப்பட்டு .. அப்போது என்னால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை இது ! அரசியல் புழுதியின் அவலங்கள் போக்கி நீடு துயில் நீக்கப்பாடி வந்த நிலாக்கள்! ஆர்ப்பரிக்கும் அலைக்கடல்கள் அடங்கிப்போக சீறிப் பறக்கும் தலைக்கடல்கள் எம் சிங்கங்கள்! தறிகெட்டுப் போன அரசியல் நாடகங்களுக்கு முடிவுகட்டப் பிறந்த எம் புரட்சிதீபங்கள் ! தன்னெழுந்து போராடும் காளையரும் தங்கையரும் விண்ணுயர்ந்த தமிழ்மரபின் கண்ணியத்தின் வடிவங்கள் ! பொன்னெழுத்தில் வரலாறு போற்றும் - நம் புரட்சிப்போர் எண்ணத்திலும் உதிக்காது துரோகம் - அது வீழ்ந்தது பார் ! தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே நமக்கோர் குணமுண்டு தயந்து பணியும் நம்முள்ளே- தகிக்கும் எரிமலைக் குழம்புண்டு !

இயற்கை எழில் மங்களூர்

Image
ஒரு முறை பணி நிமித்தமாக மங்களூர் பயணித்த போது கண்டு வியந்த இயற்கை எழிலை வார்த்தைகளில் கோர்க்க முற்பட்டு எழுதியது தான் இந்த .. என் மனம் கவர்ந்த கவிதை .... கொண்டல்தவழ் மலை முகடு கொஞ்சும் எழில் காட்டாறு வண்டு உலவும் பூக்காடு வான் உதிர்க்கும் மழைமுத்து சில்லென்றே பரவும் தென்றல் சிலிர்த்து எழும் கிளை மரங்கள் ஆர்ப்பரிக்கும் மலை அருவி அழகு மிளிர் மலையரசி காதல் கொண்டு மரங்கள் இங்கே கருமேகம் தழுவும் விந்தை! நாணம் கொண்ட குமரி யன்றோ?! நனைந்து விழும் கொடியினங்கள் ! மாலை நேர கதிரொளியில் மலையருவி பொன் போல் வீழும். அச்சமுற்ற புள்ளினங்கள் அடைவதற்கு கூடு தேடும் ! செஞ்சேற்றில் திலகமிட்டு செவ்வந்தி மலர்கள் சூடி கொஞ்சும் எழில் பெண்டிர் போலே குதித்தோடும் சிறு நதிகள். மண்ணுலகின் சொர்க்கம் என்றால் மங்களூர் என்றே சொல்வேன்!

வனிதையர் உலகமோ!

Image
இது எனது பெங்களுர் வாழ்வின் மாறுபட்ட உணர்வு... இங்கு கண்ட பெண்ணியம் மாண்பு நான் வேறெங்கும் கண்டதில்லை.. அதன் வெளிப்பாடு தான் இக் கவிதை...   **வனிதையர் உலகம் ** கவின் மலர்த் தோட்டமோ?! புவிவந்த நிலாக் கூட்டமோ?! மாந்தளிர் வண்ணமோ?!- வருடும் தேன் தமிழ்த்தென்றலோ?! கனி இதழ் மொழிகளோ- இமயப் பனி யெனக் குளிருதே! இதுவோர் வனிதையர் உலகமோ?! - மதுரக் கனி தரும் சோலையோ?! இனியொரு அழகுதான்- உலகிலே இருக்குமோ சொல் இயற்கையே! பெங்களூர் பெண்கள்-அழகிலே மயங்குதே காளையர் கண்கள்! நிமிர்ந்து நோக்கும் விழிகளின் வீச்சிலும் இனிந்து உதிர்க்கும் பன்மொழிப் பேச்சிலும் புலவன் பாரதி கண்டகனவு புதுமைப் பெண்களாய் பூத்ததே இங்கு ! ஒளி திகழ் அறிவிலும் மதி முகப்பொலிவிலும் அணி நிறை நட்பிலும் பணி செயும் மாண்பிலும் மான் விழி வீச்சிலும்- இங்கு ஆண் குலம் தோற்றதே !தோற்றதே !

எங்கள் ஊர் பெங்களூர்

Image
பெங்களூர் வாழ் தமிழன் என்ற முறையில் இங்கே வாழ்ந்து கண்டுணர்ந்ததை கவிதையாய் கொட்டி என் மனக்குமுறலை வெளிப்படுத்திய கவிதை இது ..... எங்கள் ஊர் பெங்களூர்   பனிசூழ்ந்த காலையோ வருடும் பணிச்சூழல் கவலையோ நெருடும் ! பகட்டும் கூத்தும் பார்த்திட திகட்டுமோ?! பழகிடத் துணிந்தால் பணங்காசு கேட்குமே! சூழும் நட்புக்கு பஞ்சமே இல்லை சூழல் மாறினால் வஞ்சகம் மீறுமே எல்லை ! வீதிகள் தோறும் சோலைகள் உண்டு விதிகளை மீறும் காளைகள் உண்டு! மாடங்கள் யாவும் காதலர் கூடமே! கூடிடும் யாவரும் காதலர் அல்லவே ! பதவியும் வாழ்வும் உலகத் தரத்திலே! மதிகெட்டுப் போனால் கொளுத்துவார் துரத்தியே! மொழியும் நதியும் இரு கண் போன்றதே! வழியும் குருதியில் இந்தியம் இல்லையே! இனங்கள் பலவும் இணைந்ததோர் நகரம்! மனங்கள் மட்டும் இணையாத துயரம். வைஃபையும் நெட்டும் வான் எல்லாம் தவழும்.. கைப்பேசி மட்டுமே யாவரின் கவனம் ! முகநூல் நட்புக்கு முடிவுரை இல்லை அகமகிழ் நட்பு தான் அமைவதே இல்லை! தொலைந்த ஆடையும் களைந்த கூந்தலும், பெண்ணியம் போற்றலாம் கண்ணியம் போற்றுமோ? குடிகார நட்பும் கிரெடிட் கார்டு தேய்ப்பும் ஆணவம் போற்றலா...

புத்தாண்டு வாழ்த்து

Image
இனிய புத்தாண்டு பிறப்பன்று நண்பர்களுக்குப் பகிர்ந்திட எழுதிய வாழ்த்து மடல் இது... குழலோடும்  யாழோடும்... கொஞ்சும் மழலைப் பண்ணோடும் புகழோடும் பொருளோடும் பொங்கும் நல்லருளோடும்.. பாலோடும் தேனோடும் பாரெங்கும் தமிழுணர்வோடும்... உழவோடும் தொழிலொடும் உலகோர்முன் நிமிர்நெஞ்சோடும்... நீரோடும் காவிரியும் நீதியருள் நல்லரசும்... தாலாட்டும் தழிழன்னை நல்வயிற்று புதல்வர் நாம்.. தரணியெங்கும் தலைநிமிர்ந்து கோலோச்சும் நன்னாளாளும்... ................... மேன்மேலும் வளமை எல்லாம் வழங்கவரும் புத்தாண்டை வாசலெங்கும் கோலமிட்டு நேசமுடன் வரவேற்போம்....! அன்புடன்.. *கோ. பார்த்தசாரதி*

வினாயகர் போற்றி

Image
கணபதியைத் தொழுது எழுதிய என் கவிதையிது .... ஆனை முகத்து ஞானக் கொழுந்தவன்! அரச மரத்தடி அமர்ந்தருள் பெரியவன். எந்தை ஈசன் கோவிலில் முந்தியிருக்கும் முதல்மகன். வலியவன் எளியவன் கருணைக் கடலவன். கற்பகத் தருவவன் பொற்பதம் போற்றுவோம். வலிமையில் மூத்தவன் வாரணம் போன்றவன் எளிமையின் இலக்கணம் - அவன் முன், எலியென அடங்கிடும் தலைக்கனம். கூரிய கண்கள் உணர்த்திடும் செய்தியோ கூர்ந்து நோக்கி கண்டுணர் என்பதே! ஆனைச்செவிகள் அன்புடன் சொல்வது அனைத்தையும் கேட்டு அமைதி கொள் என்பதே! பானை வயிறு உணர்த்திடும் செய்தியோ புண்பட்ட நிகழ்வையும் பண்புடன் செரித்திடும் வலிமை கொள் என்பதே! ஆனைக் கரம் சொல்வதோ அல்லவை களைந்து நல்லவை கொள் என்பதே! ஆனையே அடங்கும் அங்குசம் சொல்வதோ ஐம்புலன் அடக்கும் வல்லமை வேண்டும் என்பதே! ஓம் எனும் எழுத்தில் உறையும் திருவவன் ஓங்கார ரூபன்  ஒப்புயர் முதல்வன் கார் அமர் மேனிக் கணபதியே நின் பதம் கட்டுண்டு கிடப்பதொன்றே என் தொழிலே!

புதிய காலை

Image
ஒரு இனிய காலைப் பொழுதில் எழுதிய கவிதையிது .... பொன்னொளிர் புதிய காலை பண்ணுதிர் பறவைக் கூட்டம் தண்ணெழும் தென்றல் தொட்டுத் தழுவவே சிலிர்த்தெழுந்து வண்ணமாய் பூக்கள் தூவும் வாணுயர் மரங்கள் யாவும் ! தூரிகை ஏந்திய இயற்கை.. துரிதமாய் வண்ணம் தீட்ட மெல்லிய மலர்கள் யாவும் புன்னகை ததும்பும் பொழுதுதான்..இன்றைய காலை!!!

தமிழ்த் திருநாள் வாழ்த்து

இக்கவிதை ஒரு தமிழ் திருநாளன்று நண்பர்களுக்காக படைக்கப்பட்டது...... குலமுயரும் நலமுயரும் - குவலயத்தில் குன்றாது வளமுயரும், வானுயரும் வாழ்வுயரும் - தமிழர் தம் கோலுயரும் குடியுயரும், மண்டியிடா மாண்புயரும்- மாநிலத்தில் மானமிகு மொழியுயரும், சீறுயரும் சிறப்புயரும்- சிந்தையிலே சிங்கநிகர் நினைப்புயரும், நீருயரும் நெல்லுயரும் - நெடிதுவளர் தென்னைபனை மீண்டுயரும், இமயம்வரை கொடியுயரும் - இணையம் எங்கும் நம்மக்கள் நட்புயரும், பொங்கிவரும் பொருளும்வரும்- இப்பொங்கல்முதல் மங்காத வளமுயரும்,  பகலவன்போல் வாழ்வுயரும் தாழ்வகலும் தரமுயரும் - தரணி போற்றும் வரமருளும் தமிழ்த்திருநாள் வாழ்த்துக்கள்!" நட்புடன் கோ.பார்த்தசாரதி

முகவுரை

அன்பர்களே ! நம் அழகிய தமிழன்னைக்கு செய்யும் அரும் பெரும் தொண்டாகவே கருதி எனது கவிதைத் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறேன். எனது தொழிலும் வாழ்வும் வேறாகினும் தமிழார்வம் என் இரத்தத்தில் ஊறிய உணர்வு. அது என்னை என்றென்றும் எனக்கு மிகுந்த மன மகிழ்வைத் தரும் ஒரு உன்னதமான பணி என்பதை நான் பல முறை அனுபவத்தில் உணர்த்திருக்கிறேன். இந்த வலைத்தளம் இனி என் கவிதைகளை உலகோர் பார்வைக்கு படைக்கும்.. என் தமிழ்த்தாய்க்கு வாசமிகு மலர்களின் மாலையாய் அணி சேர்க்கும் அன்புடன் பார்த்தசாரதி