Posts

Showing posts from September, 2019

தூண்டிலிடும் உன்விழிகள்

Image
நெற்கதிரின் குனிவை கண்டேன் நின் முகத்தில் நாணம் கண்டேன்! விற்போரில் வீரம் கொண்டேன் விழிவீச்சில் தூரம் நின்றேன்! முத்துக்கள் மாலை என்றேன் முல்லையவள் சிரிக்கக் கண்டேன்! கிள்ளை குயில் மொழிகள் என்றேன் கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்! அன்னம் நடைபயில ஆசை கொண்டேன் அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்! நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும் நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்! மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்! வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன் பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்! புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன் உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்! செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன் செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்! தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன் தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!

மருந்தாளும் வேந்தர் தினம் 25th September

Image
பிணி நீக்கும் பணி ஏற்றோம் வினை தீர்க்கும் வித்தை கற்றோம் நஞ்சையும் அமிழ்தாக்கி நலம் செய்தோம் உயிர்காக்கும் மருத்துவரின் உற்றதுணை நாமானோம். முப்பொழுதும் திறந்திருக்கும் மருந்தகமும் நமதே! மருந்துச்சீட்டு தலையெழுத்தின் விடையறிவோம் நாமே! மருத்துவர்கள் அறியாத  கிராமத்து வைத்தியரும் நாமே! மருந்துசெய் கெடுவிளைவை புரிந்துசொல்லும் பிரம்மா நாமே! எப்போதும் மக்கள்பணி இறைபணியாய் முன்நிற்கும் மனிதகுலம் காக்கும் புனித குலம் நமதன்றோ!

தமிழ்த் தாய் வாழ்த்து

Image
பொதிகை மலை உகுத்த பொன்னுருக்கு எழிலருவி; வைகை வாழ் நாட்டில் வளர்ந்திட்ட இளங்குமரி; குள்ள மா முனிவன் குடில் பெற்ற அருட்செல்வி; குடகுமலைக் காவிரியில் குதித்தாடும் பைங்குமரி; செம்மையுரை வள்ளுவரின் செந்நாக்கு பேசும் மொழி; வள்ளல் கடையெழுவர் வாழ்வித்த உயிர் மூச்சு; தொட்டில் இளங் குழந்தை துயிலூட்டும் தாலாட்டு; நளினக் காற்சதங்கை நடைமாற்றும் இசைக்கூத்து; எழிலொழுக ஒவியத்தில் எழுதுவித்த குயிற்பாட்டு; நாற்று நடும் உழத்தியரின் நாவளைத்த இசைப்பாட்டு; குதித்தோடும் காவிரியின் குற்றாலக் குளிர்சாரல்; திகட்டாத நறும்பூக்கள் தேடிவந்த தேன்தென்றல்; பகட்டாக வானெழுந்த பல்வண்ணப் பட்டாம்பூச்சி; ஔவை மூதரசி அணிந்திருந்த பொன்மகுடம்; பாட்டரசன் பாரதி மீட்டுவித்த நல்வீணை; கட்டுத் தறி கூட கனிவாய் பேசும் கவிதை; தமிழ்- மெல்லியல்பில் இளங்குமுதம் மேன்மையிலே நல்லமுதம் உயர்சிறப்பில் பனி இமயம்- உயர்வுக்கு உயிரே ஈந்தாலும் தகும்!

தலைவன் வந்தான்

Image
பூவிழித் தாரகை பூண்டது நித்திரை பூம்பொழில் சிலிர்த்து பூமணம் நிறைக்க நாழிகை நகர்கையில் நல்லதோர் கவிதை மெல்லிசை பின்வர மென்மையாய் இனித்தது ஏழிசைப் பெண்குயில் ஏக்கமாய்க் கூவிட வானெழும் சூரியன் வதனப் பார்வையில் கானகம் நிறைத்த காரிருள் நாயகி நளினச் சிரிப்புடன் நாணமாய் விலகினாள். குவளை பூத்த குளக்கரைப் படியினில் கவலை பூண்டு காதலி நானழ தேதமிழ்த் தலைவன் தேடினான் இல்லையோ? வருதல் உரைத்து மாறுதல் ஏனோ? முல்லைச் சிரிப்பின் முகவரி தொலைந்ததோ? கொவ்வை இதழ்கள் வெம்மை ஈந்ததோ? குழலும் யாழும் குரலினும் இனித்ததோ? கோலக் கருவிழி கொஞ்சுதல் கசந்ததோ? நிகழும் யாவும் நினைவினில் இல்லையோ? ஏனோ தலைவன் என்திசை வந்திலன்? நெஞ்சம் நஞ்சென  நெருடும் வேளையில் வேங்கைப் பாய்ச்சலில் வெண்ணிறப் புரவியில் செந்நிறச் சூரியன் செங்கடல் எழுகையில் ஆத்தி மாலை அணிசெய் மார்பில் முத்தின் வகையென பூத்திடும் வியர்வையில் முத்துச் சிரிப்பின் முகவரி கண்டு எந்தன் நாயகன் என்னிடம் வந்தான் ’அன...

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி

Image
  தேசிய மேல்நிலைப்பள்ளி- நான் பூசிக்கும் கோயிலன்றோ?! கல்விக் கண்திறந்த சான்றோர் நல்லறம் நடத்திய மன்ற மன்றோ?! காலம் தவறாமைக்குத் தமிழாசான் விஸ்வநாதன்(TV) தலைமைப் பண்புக்கு தங்கநிகர் இராமசீனிவாசன்(HM Sir) வேதியல் வித்தகர் வேந்தர்நிகர் இராமசாமி(LR) இயற்பியலின் தந்தை இன்முகமாய் தியாகராஜன்(VT) கணிதப் புலியன்றோ?! கம்பீர விஜயராஜ்(RVR) கலைஇலக்கியப் பேரொளி கடமைதவறா பத்மா அம்மையார்  அன்னை தமிழுக்கு அணிசேர்த்த மாமன்னர் மீனவன் கரைகாணா மாணவர்க்கு கரம் கொடுத்த துவாரகைக் கண்ணன் (RTK) சொந்தப் பிள்ளை போல சொல்லிக் கொடுப்பாரே காந்திமதி தாயார்! எண்ணிலடங்கா வேந்தர்கள் எண்ணங்களில் சிம்மாசனமிட்ட நன்நாகை நகர் பெற்ற பொற்கோயில் அன்றோ எம்பள்ளி! அந்நாளை நினைத்து ஏங்கி அனுதினமும் தேடுகின்றேன் நான்பெற்ற செல்வங்கள் நல்லதொரு கல்விகாண! கொட்டிக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை கோவேந்தர் கொடுத்த கல்வி! வையத்தில் வாழ்வுதந்த வேந்தே! வணங்க வேண்டும் உம் கால்கள் எங்கே?! கோ. பார்த்தசாரதி