தூண்டிலிடும் உன்விழிகள்

நெற்கதிரின் குனிவை கண்டேன்
நின் முகத்தில் நாணம் கண்டேன்!

விற்போரில் வீரம் கொண்டேன்
விழிவீச்சில் தூரம் நின்றேன்!

முத்துக்கள் மாலை என்றேன்
முல்லையவள் சிரிக்கக் கண்டேன்!

கிள்ளை குயில் மொழிகள் என்றேன்
கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்!

அன்னம் நடைபயில ஆசை கொண்டேன்
அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்!

நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும்
நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்!

மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள
மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்!

வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன்
பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்!

புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன்
உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்!

செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன்
செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்!

தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன்
தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!




Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்