Posts

Showing posts from August, 2020

தத்துவ வடிவே வினாயகா

Image
ஆனை வடிவில் ஆழ்ந்தநல் தெளிவும் பானை வயிற்றில் பயின்ற பொறுமையும் கூரிய விழிகளில் குவிந்த மனமும் அகன்ற செவியில் அனைத்து அறிவும் ஒற்றைக் கொம்புபோல் ஏற்றதைத் தேர்ந்து நீண்ட துதிக்கையில் வேண்டிய சுற்றமும் அங்குசக் கரங்கள் ஐம்புலம் அடக்கவும் அடங்கிய எலிபோல் ஆசைகள் ஒடுங்கவும் அபயக் கரங்கள் அடைக்கலம் தந்திட தேன்சுவை மோதகம் தேடிய வரமாய் வானவர் வாழ்த்தி வையகம் வாழ கழல்கள் பற்றி தொழுதவர் துணைவரும் அழகிய களிறே! அற்புதத் திருவே! எளியவர் இறையே! என்றும்என் துணையே! கற்பகத் தருவே! பொற்பதம் பணிந்தேன்!

சுதந்திரம் நமக்கு நிரந்தரம்

Image
 விடிகாலைப் பொழுது இங்கு விடிவெள்ளி முளைத் தெழுந்து இனிதாகக் குயில் இசையில் இழைந்தோடி தென்றல் வர இதுவரையில் இருந்த இருள் இனி இங்கு நிலைபெறுமோ?! தொடுவானம் சிவந் தெழுந்து துளிர்க்கிறதே புதுக் கனவு இனி ஒருநாளும் துன்பமில்லை ஒழிந்திடுமே சூழும் தொல்லை துயில் களைந்து எழுமனமே! துணிவே நம் துணைவருமே! அன்று பிறந்த சுதந்திரம் என்றும் நமக்கு நிரந்தரமே! பிறநாட்டு பொருள் எதற்கு? திறம் வளர்த்து உருவாக்கு உழுது உண்ணும் விவசாயம் தொழுது உயர்த்தும் வழிதேடு தடம்மாறும் இளைஞர் கூட்டம் தரம் உயர்த்தி வேலைகொடு மதமாயப் பூசல் எல்லாம் மனிதர்க்கு வேண்டாம், கேடு! இந்தியக் கல்வித் தரமே இனி உலகின் தரமென்றாக்கு பாரதப் புதல்வரே இனி பாரின் வேந்தர் என்றாக்கு. துயில் களைந்து எழுமனமே! துணிவே நம் துணைவருமே! அன்று பிறந்த சுதந்திரம் என்றும் நமக்கு நிரந்தரமே!