இந்திய சுதந்திரப் பொன்விழா 1997

நம் இந்திய தேசம் அடிமைத்தளையிலிருந்து 1947 ல் விடுபட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து வீறுநடை போட்ட தருணம்...1997ல் நம் நாடே மகிழ்ச்சியாக கொண்டாடியது. அந்த "சுதந்திரப் பொன் நாள்" நாம் அடிமைத்தனத்திலிருந்து வெகு தொலைவு வெற்றிகரமாக கடந்து வந்து விட்டோம் என நமக்கு நினைவூட்டி பெரு மகிழ்ச்சியளித்த தருணம் அது. இப்போது நாம் நூற்றாண்டு கொண்டாட்டத்தை நோக்கி விரைவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.. இந்த நேரத்தில் எனது பழைய சுதந்திரப்பொன்விழா கவிதை எக்காலத்திற்கும் பொருந்துவதை எண்ணி அசை போட்டுப் பார்க்கிறேன். அக்கவிதை இதோ!


பொழுதெல்லாம் புல்மடியில்
       புரண்டு போகப்

புலர் காலைப் பனித்துளிகள்
        புகையாய்ச் சூழ

விரிகதிரோன் வருகை தர
         விடிவெள்ளி பிரிவு பெற

மலரேந்தும் சோலையெல்லாம்
        மதுவேந்தி மயங்கி வீழ

மதுவெறியில் மதிகெட்டு - கரிவண்டு
        ரீங்கார முழக்கமிட

மஞ்சள் கீழ் வானம்
        மணப் பெண்போல் கோலமிட

விரிகதிரோன் கண்ணசைவில்
        விடிவு காணும் "இந்நாள்"

கடந்து போன பொழுதெல்லாம்
நடந்து போன நாளெல்லாம்

தொடர்ந்து வந்த நட்பெல்லாம்
தொலைந்துபோன வெறுப்பெல்லாம்

இவ்விடிகாலைப் பொழுதோடு
விரிகிறது கண்முன்னே .

சுதந்திர மூச்சை 
சுவாசிக்க வைத்துவிட்டு

நிரந்தரமாய் மூச்சிழந்த 
நித்திய சீலர்தம்

சத்தியப் போர் வென்ற சரித்திரத் திருநாள்

பாரதம் பெற்ற இச் 
"சுதந்திரப் பொன்னாள்"

நித்தமும் சீலராய் 
நிகரிலா மறவராய்

பகைவரை ஒழித்து 
பாரதம் காத்து

தலைமகன் நானெனத் 
தாயைப் போற்றி

மதி நிறை இரவெலாம் 
மகிழ்ச்சி கொள்பொழுதாய்

கவிதைகள் எழுதி 
காற்றினில் உலாவி

கழிப்போம் இனிதாய் இனிவரும் பொழுதை











Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்