கார்கில் போர் 1999

தேசப்பற்று உணர்ச்சிப் பெருக்காய் ஊற்றெடுத்த தருணம் ஒன்று எனது இளம் வயதில் சந்திக்க நேர்ந்ததென்றால் அது 1999ம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த கார்கில் யுத்தம் தான். யாரும் எதிர்பாராத ஒரு கடுங்குளிர் காலத்தில் பாக்கிஸ்தான் படைகள் நமது கார்கில் குன்றுகளை ஆக்ரமித்து தாக்குதல் நடத்த துவங்கின.. அந்த சவாலை முறியடித்து மூன்று மாதப் போருக்குப் பிறகு நமது இந்தியப் படைகள் நமது கார்கில் எல்லையை மீட்டெடுத்தனர்.. அந்த வரலாற்று நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. பள்ளிகள் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தி பாக்கிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டதை பல இடங்களில் கண்டேன் ... எனது இளரத்தம் கொதித்து .. அப்போது நான் எழுதிய கவிதை இதோ


கார்கில் போர்

சகோதர பாசத்தில் சமாதானம் பேசினோம்?
மதம் கொண்டு போனதால் மதிகெட்டு போனதோ?
பஞ்சத்தில் செத்தும் பசியால் உழன்றும்
வஞ்சிக்கும் எண்ணம் நெஞ்சில் பிறந்ததோ?
பஞ்சென நினைத்துப் பனிமலை ஏறிவிட்டாய் !
துஞ்சும் புலியை தூசென நினைத்து விட்டாய்
வெஞ்சினம் கொண்ட எம் வீரர்கள் உன்னை
சுட்டுச் சாய்க்குமுன் விழுந்திடு கால்களில்
எல்லை தாண்டி முள்ளை மிதித்து விட்டாய்
எலிவளை விடுத்து புலிக்குகை புகுந்துவிட்டாய்
தாயைத் தாக்கவந்த தறிகெட்ட மூடனே
பாயும் புலிகளின் பல்லிடுக்கில் சிக்கிவிட்டாய்
முதுகெலும்பை முறிக்கும்வரை முடியாது இந்தப்போர் - உன்
முடிகூட இம்மண்ணில் முளைத்து எழ விடமாட்டோம்.
கோ.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்