அத்திவரதர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு அதிசய நிகழ்வாக அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு நிகழ்திருக்கிறது. வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் திருக்குள நீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டும் வழிபடப்பட்டு மீண்டும் திருக்குள நீரில் மூழ்கிவைக்கப்படும் அதிசயம் இப்போது நம் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த அத்திவரதர் அத்திமரத்தால் வடிக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நூற்றாண்டு கடந்த வைபவம் பிரதமர், ஜனாதிபதி தொடங்கி அனைத்து மாநிலத்தவரையும் ஈர்த்து குறுகிய காலத்தில் பெரும் கவனம் பெற்றது நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அற்புத நிகழ்வே! இதற்குமுன் 1854, 1892, 1937, 1979 ம் ஆண்டுகளில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடந்திருக்கிறது. இந்த ஆண்டும் 1-7-2019 முதல் 17-8-2019 வரை நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது. ஆத்திவரதர் என்னை ஆட்கொண்டு தனது நிறைவு நாளில் ஒரு பாமாலை சூட்ட என் உள்ளத்தில் பணித்ததால் இக்கவிதையை சிரமேற்கொண்டு எழுதிபரவசமுற்றேன்.
கலியுக வரதனே
காஞ்சியின் வரதனோ!
தடாகம் பூத்தெழுந்த
தாமரை மணாளனோ!
வராது வந்த மாமணியே
வரம் தாராது மீண்டும்
தண்ணீர் திருக்குளம்
புகுதல் நலமோ?
அத்தி பூத்தது போல்
அவதரித்த அத்திவரதா!
அடுத்து நீ வருவதற்கு
ஆண்டுகள் நாற்பதாமே!
எத்திக்கும் உன்னடியார்
ஏங்கித் தவமிருக்க
தித்திக்கும் கரும்பாய் நின்
திருப்பெயரை தினம்துதிக்க
ஆனந்த சயனத்தில்
ஆழ்ந்தனையே அருள் வரதா!
காணக் கண்கோடி வேண்டும்
கண்டவரோ சிலகோடி பேரே!
வாடும் மனம்குளிர உன்
வதனப் புன்னகை கண்டால் போதும்!
தேடும் பொருள் எல்லாம் உன்
திருவடிமுன் ஒரு தூசாய் தோன்றுதப்பா!

Comments
Post a Comment