Posts

சாய் குறள் மாலை

Image
1. சாய்நாமம் போற்றிப் புகழ்ந்து வணங்கியோர் நோயின்றி எய்துவர் நூறு. 2. சாய்பாதம் பற்றியோர் பெற்ற புகழனைத்தும் துய்யவாழ்வில் நிற்கும் துணை. 3. கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி பெருமை ஏற்கும் உலகு. 4. சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு மாயை வெறுக்கும் மனது. 5. ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார் ஏந்தும் கரங்களில் உய்வு. 6. நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்கு பஞ்சம் அகலுமே காண். 7. வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர் நெஞ்சம் அடையும் உயர்வு. 8. வறியோர் பசியும் வருத்தும் பிணியும் நொடிக்குள் மறைத்தவர் சாய். 9. சாய்கழல் பற்றினார் சீரடி சேர்ந்தார்க்கு நோய்நொடி என்றும் இல. 10. வான்மழை ஓங்கி வளமை பெருக்குமே நான்மறை சாய்தொழும் நாடு. 11. சீரடி பெற்றசீர் சித்தராம் சாய்மகான் சீர்மிகு மானிடர் பேறு. 12. கார்முகில் வந்து கழனி சிறக்குமாம் சீர்வளர் சாய்நல் வரவு. 13. வாய்மை  எளிமை எளியோர்க் கருள்செயும் சாய்யருள் பூசனை நன்று. 14. சாய்முகம் காணவே ஏங்கும் அடியவர் தாய்முகம் கண்ட மகவு. 15. காணும் பொருளில் பலவுருத் தோற்றமாய்க் காட்சி தருபவர் சாய். 16. மாதவச...

பூங்கா வாழ்க்கை

Image
மரங்கள் அடர்ந்த சோலையில் மண்டிக் களிக்கும் மழலைகள்! விடுமுறை வந்ததால் வசந்தம், பாடங்கள் மறந்த பரவசம்! புல்மடி உறங்கும் பெரியோர்; புகலிடம் தேடும் முதியோர்; கவலைகள் மறந்த குடும்பம் கடமைகள் இருந்தும் கூடும்! பறவைகள் போலே யாவரும் பாடித் திரிவதே ஒருசுகம்! இருவர் மட்டுமே உலகில் இருப்பது போன்றோர் நினைப்பில் காதலர் நடத்திடும் குறும்போ கலைஎழில் நிழற்பட விருந்து! பொங்கும் அழகுப் பூவினம் பெங்களூர் தோட்டத்து இரத்தினம்! பரந்து, விரிந்து, மனம்போல் பசுமை விரிக்கும் மரங்கள்!- அவை பணிச்சுமை வளைத்த முதுகை பஞ்சணை ஏந்தும் தாய்தான்! இயற்கையின் மடியில் ஒன்றாய் இன்பமாய்க் கூடும் மாந்தரோ தொந்தியைக் குறைக்கவும் ஓடுவார்; நொந்ததை மறக்கவும் நாடுவார்; அடுக்கு மாடிக் கூட்டுக்குள் அடைபட்டு வெந்தவர் கூடுவார். செங்கதிர் வெயிலில் வாடியோர் சிந்தனை மறந்தே தூங்குவார். மந்திரப் புன்னகை இயற்கை-ஆம் மாறக்குமே இயந்திர வாழ்க்கை!

இந்தியத் தலைமகன் காந்தி மகான்

Image
பொன்னுருக்கு எழில் வானம் பூத்திருக்கும் தென்புலத்துத் தேன் தென்றல் தாலாட்டும்! வெண்ணிறத்து பனிமகுடம் இமயம் சூடும் கண்ணுறங்க கடல் அலைகள் கவிதைபாடும் இன்முகத்து எழில் அன்னை பாரதத்தின் பொன் வயிற்று நன்மகன்தான் புனித காந்தி! நன்னெறியும் நாணயமும் நல்வாழ்வும் பொன் பொருளும் புகழ் சிறப்பும் நல்லறிவும் இந்நிலத்தின் பெருமை என உலகறிய இங்கிலாந்து கள்வருக்கோ வயிற்றெரிவு! மானமுயர் பாரதத்தை அடிமை கொண்டு மக்களெலாம் மாடுகள் போல் வாழவைத்தார். வழக்காடி பொருளீட்ட வந்த காந்தி  வாழ்வியலை மாற்றியதே இனவெறி தான் இனவெறியன் அன்றொருநாள் உதைத்த உதை, இந்தியரின் சுதந்திரத்தின் விதைதான் போலும்! தம்மக்கள் நலம் பேணும் நோக்கம்விட்டு- காந்தி தாய் நாட்டின் தாழ்வுதனை போக்க வந்தார் எந்நாளும் வாய்மையே வெல்லும் என்று உண்ணா நோன்பிருந்து உரக்கச் சொன்னார். துணிந்து எதிர்த்த வீரர் எல்லாம் துப்பாக்கி குண்டுகளை ஏந்தி வீழ வெற்றுடம்பு காந்தி மகான் முன்னே, சிற்றெறும்பாய் பரங்கியர்கள் தோற்று நின்றார் உத்தமர் காந்தியின் உண்ணா நோன்பு, உலகப் போர் முறை காணாத ஒன்று! மேலாடை துறந்த இந்திய தந்தைக்க...

தூண்டிலிடும் உன்விழிகள்

Image
நெற்கதிரின் குனிவை கண்டேன் நின் முகத்தில் நாணம் கண்டேன்! விற்போரில் வீரம் கொண்டேன் விழிவீச்சில் தூரம் நின்றேன்! முத்துக்கள் மாலை என்றேன் முல்லையவள் சிரிக்கக் கண்டேன்! கிள்ளை குயில் மொழிகள் என்றேன் கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்! அன்னம் நடைபயில ஆசை கொண்டேன் அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்! நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும் நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்! மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்! வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன் பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்! புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன் உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்! செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன் செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்! தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன் தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!

மருந்தாளும் வேந்தர் தினம் 25th September

Image
பிணி நீக்கும் பணி ஏற்றோம் வினை தீர்க்கும் வித்தை கற்றோம் நஞ்சையும் அமிழ்தாக்கி நலம் செய்தோம் உயிர்காக்கும் மருத்துவரின் உற்றதுணை நாமானோம். முப்பொழுதும் திறந்திருக்கும் மருந்தகமும் நமதே! மருந்துச்சீட்டு தலையெழுத்தின் விடையறிவோம் நாமே! மருத்துவர்கள் அறியாத  கிராமத்து வைத்தியரும் நாமே! மருந்துசெய் கெடுவிளைவை புரிந்துசொல்லும் பிரம்மா நாமே! எப்போதும் மக்கள்பணி இறைபணியாய் முன்நிற்கும் மனிதகுலம் காக்கும் புனித குலம் நமதன்றோ!

தமிழ்த் தாய் வாழ்த்து

Image
பொதிகை மலை உகுத்த பொன்னுருக்கு எழிலருவி; வைகை வாழ் நாட்டில் வளர்ந்திட்ட இளங்குமரி; குள்ள மா முனிவன் குடில் பெற்ற அருட்செல்வி; குடகுமலைக் காவிரியில் குதித்தாடும் பைங்குமரி; செம்மையுரை வள்ளுவரின் செந்நாக்கு பேசும் மொழி; வள்ளல் கடையெழுவர் வாழ்வித்த உயிர் மூச்சு; தொட்டில் இளங் குழந்தை துயிலூட்டும் தாலாட்டு; நளினக் காற்சதங்கை நடைமாற்றும் இசைக்கூத்து; எழிலொழுக ஒவியத்தில் எழுதுவித்த குயிற்பாட்டு; நாற்று நடும் உழத்தியரின் நாவளைத்த இசைப்பாட்டு; குதித்தோடும் காவிரியின் குற்றாலக் குளிர்சாரல்; திகட்டாத நறும்பூக்கள் தேடிவந்த தேன்தென்றல்; பகட்டாக வானெழுந்த பல்வண்ணப் பட்டாம்பூச்சி; ஔவை மூதரசி அணிந்திருந்த பொன்மகுடம்; பாட்டரசன் பாரதி மீட்டுவித்த நல்வீணை; கட்டுத் தறி கூட கனிவாய் பேசும் கவிதை; தமிழ்- மெல்லியல்பில் இளங்குமுதம் மேன்மையிலே நல்லமுதம் உயர்சிறப்பில் பனி இமயம்- உயர்வுக்கு உயிரே ஈந்தாலும் தகும்!

தலைவன் வந்தான்

Image
பூவிழித் தாரகை பூண்டது நித்திரை பூம்பொழில் சிலிர்த்து பூமணம் நிறைக்க நாழிகை நகர்கையில் நல்லதோர் கவிதை மெல்லிசை பின்வர மென்மையாய் இனித்தது ஏழிசைப் பெண்குயில் ஏக்கமாய்க் கூவிட வானெழும் சூரியன் வதனப் பார்வையில் கானகம் நிறைத்த காரிருள் நாயகி நளினச் சிரிப்புடன் நாணமாய் விலகினாள். குவளை பூத்த குளக்கரைப் படியினில் கவலை பூண்டு காதலி நானழ தேதமிழ்த் தலைவன் தேடினான் இல்லையோ? வருதல் உரைத்து மாறுதல் ஏனோ? முல்லைச் சிரிப்பின் முகவரி தொலைந்ததோ? கொவ்வை இதழ்கள் வெம்மை ஈந்ததோ? குழலும் யாழும் குரலினும் இனித்ததோ? கோலக் கருவிழி கொஞ்சுதல் கசந்ததோ? நிகழும் யாவும் நினைவினில் இல்லையோ? ஏனோ தலைவன் என்திசை வந்திலன்? நெஞ்சம் நஞ்சென  நெருடும் வேளையில் வேங்கைப் பாய்ச்சலில் வெண்ணிறப் புரவியில் செந்நிறச் சூரியன் செங்கடல் எழுகையில் ஆத்தி மாலை அணிசெய் மார்பில் முத்தின் வகையென பூத்திடும் வியர்வையில் முத்துச் சிரிப்பின் முகவரி கண்டு எந்தன் நாயகன் என்னிடம் வந்தான் ’அன...